முகப்பு
தமிழ்நாடு

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு?

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு செய்துள்ளதாக வெளியான தகவல்களைப் பற்றி...

Updated On : 19 மார்ச், 2026 at 3:10 PM
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர்.
பகிர்:

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கும் ஏப். 9-ஆம் தேதி, தமிழ்நாட்டில் ஏப். 23 ஆம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏட் 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பேரவைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆளும் திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

சீமானின் நாம் தமிழர் கட்சியும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன. அதில், நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் எனும் முழக்கத்துடன் களத்தில் இருக்கும் திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுவரை நடத்த பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகளும், ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகளும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 இடங்களும், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அமமுக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில், கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் அமமுக இடம்பெறவில்லை. ஆனால், அதற்கு முன்னதாக, 2021 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தில்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரனும் நாளை தில்லிக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழலுக்கு மத்தியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணியின் பாமகவுக்கு 17 தொகுதிகளும், டிடிவி தினகரனின் அமமுக 9 தொகுதிகளும், தமாகாவுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக நேரடியாக 170 இடங்களில் போட்டியிடுவதில், எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக உள்ளதாகவும், மீதமுள்ள 64 தொகுதிகளை மட்டுமே கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக மற்றும் பிற சிறிய கட்சிகளுக்குப் பகிர்ந்து அளிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, புரட்சி பாரதம், தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போன்றவைகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

அந்த 64 தொகுதிகளில் பாஜக, பாமக, அமமுகவைத் தவிர்த்து மீதமுள்ள தொகுதிகளைப் பகிர்ந்தளிக்கவும் அதிமுக தரப்பில் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய ஜனநாயக கட்சி, இந்திய குடியரசுக் கட்சி போன்றவை 13 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம், இந்த சிறிய கட்சிகளை அதிமுகவின் இரட்டை இலையிலா அல்லது தாமரையில் போட்டியிட வைப்பதா? என்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் இந்த இழுபறி நீடிப்பதாகவும், இன்னும் ஓரிரு நாள்களில் தொகுதி பங்கீடு முடிவுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Reports have emerged that seat sharing has been completed in the AIADMK-led National Democratic Alliance in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.