சாவர்க்கரை எதிர்ப்பவர்களை இரண்டு நாள்கள் அந்தமான் சிறையில் அவர் இருந்த அறையில் அடைக்க வேண்டும் என சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவாண் கருத்து தெரிவிக்கையில்,
"சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கோரினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கினால் நாங்கள் (காங்கிரஸ்) அதை எதிர்ப்போம். சாவர்க்கரின் வாழ்க்கை சர்ச்சைக்குரியது" என்றார்.
இந்நிலையில், பிருத்விராஜ் சவாண் கருத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"நாங்கள் எப்போதுமே வீர சாவர்க்கருக்கான மரியாதையைக் கோருகிறோம். வீர சாவர்க்கரை எதிர்ப்பவர்கள் எந்த கொள்கையுடையவர்களாக இருந்தாலும் சரி, எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அறையில் இரண்டு நாள்கள் அடைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவருடைய தியாகம் மற்றும் நாட்டுக்கான அவரது பங்களிப்பு குறித்து அவர்களுக்குப் புரியும்.
பிருத்விராஜ் சவாண் மகாராஷ்டிரத்தின் மூத்த தலைவர் ஆவார். சாவர்க்கரின் பங்களிப்பு குறித்து அவருக்கு நன்கு தெரியும். சாவர்க்கர் தனது வாழ்க்கையில் 14 ஆண்டுகளை அச்சம் தரக் கூடிய அந்தமான் சிறையில் கழித்தார். எனவே, இதற்காக அவர் கௌரவிக்கப்பட வேண்டும் என்பது எப்போதுமே சிவசேனையின் நிலைப்பாடாகும்" என்றார்.
சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ள இந்தக் கருத்து சிவசேனை தலைமையிலான மகாராஷ்டிர அரசின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.