ப.சிதம்பரம் சிறை சென்று வந்த திருடர்: தர்மேந்திர பிரதான் பதிலடி
மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் கருத்துக்கு மத்திய பாஜக அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார்.
ப.சிதம்பரம்தான் திருட்டு குற்றத்திற்காக சமீபத்தில் சிறை சென்று வந்திருக்கிறார் என மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் கருத்துக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார்.
2019 ஆம் ஆண்டிற்கான ஜனநாயகக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசை பட்டியலில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார புலனாய்வு பிரிவு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்று வரும் நிகழ்வுகளின் மூலம் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு, ஜனநாயக நிறுவனங்கள் பலவீனமடைந்து வருவதை, உன்னிப்பாக கவனித்து வரும் அனைவரும் அறிவார்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாடு செல்லும் திசையை நினைத்து உலகமே திகைத்து நிற்கிறது. தேசபக்தி நிறைந்த இந்தியர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது இந்தியா செல்லும் பாதை எச்சரிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது' எண்ரடு பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'ப.சிதம்பரம்தான் திருட்டு குற்றத்திற்காக சமீபத்தில் சிறை சென்று வந்திருக்கிறார். அவர் அமைச்சராக இருந்த போது, அவர்களது ஆட்சிக்காலத்தில் என்னவெல்லாம் செய்தார் என்பது மக்கள் அனைவருக்குமே தெரியும். எனவே, விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பவர்கள் அவர்களுக்கு பிரச்னையாகத் தான் தெரிவார்கள்' என்று பதில் அளித்துள்ளார்.