குடியரசு தின விழாவில் கெளரவிக்கப்பட்ட 49 இளம் வயது ஹீரோக்கள்!
தில்லியில் ஞாயிறன்று 71வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தில்லியில் ஞாயிறன்று 71வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தில்லி ராஜபாதையில் ஞாயிறு காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அணிவகுப்பில், அலங்கரிக்கப்பட்ட ஜீப்புகளில் வந்த 49 இளம் வயது சாதனையாளர்களுக்குப் பார்வையாளர்களிடையே பலத்த கைதட்டல்களுடன் அருமையான வரவேற்பு அளிக்கப்பட்டது.
18 சிறுமிகள் மற்றும் 31 சிறுவர்கள் உள்ளிட்ட இந்த 49 குழந்தைகள் வெவ்வேறு துறைகளில் செய்துள்ள சாதனைக்காக 'பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புராஸ்கர் விருது’ பெற்றனர்.
இந்தக் குழந்தைகளுக்கு தைரியம், புதுமை, விளையாட்டு, கலை, கலாச்சாரம், சமூக சேவை, இசை மற்றும் பிற துறைகளின் தகுதிக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
தங்கள் குழந்தைச் சாதனையாளர்களின் துணிச்சலைப் பற்றி கூட்டத்தினரிடையே, பெற்றோர்கள் விளக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் ஜீப்பிலிருந்து திரும்பி வந்த குழந்தைகளுக்கு தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கினர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி இந்தக் குழந்தை சாதனையாளர்களுடன் உரையாடும் போது, "இந்த இளம் வயதில் நீங்கள் அனைவரும் நம்பமுடியாத பணிகளைச் செய்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது எதிர்காலத்தில் இன்னும் நல்ல செயல்களைச் செய்ய உங்களைத் தூண்டியிருக்க வேண்டும். நீங்கள் தைரியம் காட்டியுள்ளீர்கள். கடினமான சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடுங்கள். "
புதுடில்லியில் உள்ள போர் நினைவுச் சின்னம் மற்றும் போலீஸ் நினைவுச் சின்னத்தையும் பார்வையிடுமாறு அவர் மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.
ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் குழந்தைகள்.