ரத்தன் டாட்டா காலில் விழுந்து ஆசி பெற்ற இன்போஸிஸ் நாராயணமூர்த்தி: நெகிழ வைத்த தருணம்!
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாட்டா காலில் விழுந்து 'இன்போஸிஸ்' நிறுவனரான நாராயணமூர்த்தி ஆசிபெற்ற நெகிழ வைக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மும்பை: இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாட்டா காலில் விழுந்து 'இன்போஸிஸ்' நிறுவனரான நாராயணமூர்த்தி ஆசிபெற்ற நெகிழ வைக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது.
டி.ஐ.ஈ எனப்படும் சர்வதேச தொழில் முனைவோருக்கான கூட்டமைப்பின் மும்பை பிரிவின் சார்பாக, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாட்டாவிற்கு 'டி.ஐ.ஈ ஐகான்' விருது வழங்கும் விழா செவ்வாயன்று மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ரத்தன் டாட்டாவிற்கு அந்த விருதினை வழங்குவதற்காக, 'இன்போஸிஸ்' நிறுவனரான நாராயணமூர்த்தி கலந்து கொண்டிருந்தார். விழாவின் போது விருதினை வழங்கிய பின்னர் நாராயணமுர்த்தி, ரத்தன் டாட்டாவின் காலில் விழுந்து ஆசிபெற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
புதனன்று ரத்தன் டாட்டாவும் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அத்துடன் நாராயணமூர்த்தியின் செயல்பாடு தன்னை மிகவும் நெகிழச் செய்து விட்டதாகவும், அவரது கையால் விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சி தருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சமூக வலைத்தளமான ட்விட்டரில் பயனாளர்கள் பலரும் அந்தப் புகைப்படத்தினை பகிர்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.