ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம்: மகாராஷ்டிர அமைச்சர்
வரும் மாதம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்று மகாராஷ்டிர அமைச்சர் விஜய் வாடேதிவர் தெரிவித்துள்ளார்.
புணே: வரும் மாதம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்று மகாராஷ்டிர அமைச்சர் விஜய் வாடேதிவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மத்திய அரசிடமிருந்து மகாராஷ்ரத்திற்கு நிதியுதவி எதுவும் கிடைக்கவில்லை. யாரவது ஒரு தலைவர் மாநிலத்திற்கு நிதியுதவி கிடைப்பதாகக் கூறினால் அவர்கள் இந்த மாநிலத்தை எமாற்றுகிறார்கள் என்று அர்த்தம். அதேநேரம் மாநிலத்தில் கரோனா தொற்று சூழலைக் கவனிக்க இயலாத அளவிற்கு நிதிச் சிக்கல் எதுவும் ஏற்பட்டு விடவில்லை.
அதேநேரம் சூழல் எப்படி மாறிக் கொண்டிருக்கிறது என்றால் அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கடன் வாங்க வேண்டிய நிலையை நோக்கி மாநில அரசு செல்கிறது. ஒருசில துறைகளைத் தவிர பெரும்பாலான துறைகளில் செலவுகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மாணவர்களுக்கு நிதியுதவி அழைக்கும் சார்தி திட்டத்திற்கு பாதிப்பு என்று சிலர் தவறாகப் புரிந்து கொண்டு, தகவல் பரப்புகிறார்கள். அதில் அரசியல் செய்கிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. மாணவர்களுக்கு நிதியுதவி தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.