நாட்டில் கரோனா தொற்று பாதித்து மரணமடைந்தவர் விகிதம் 4.52%: மத்திய சுகாதாரத் துறை
நாட்டில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 60.80% ஆக உயர்ந்துள்ளது, அதே சமயம், கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் 4.52% ஆக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 60.80% ஆக உயர்ந்துள்ளது, அதே சமயம், கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் 4.52% ஆக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் நேற்று 60.73% ஆக இருந்த நிலையில், சனிக்கிழமை காலை நிலவரப்படி அது 60.80% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், நாட்டில் கரோனா பாதித்து குணமடைவோர் மற்றும் மரணம் அடைவோர் விகிதாச்சாரம் 95.48% : 4.52% என்ற அளவில் இருப்பதாகவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம்.. கான்பூர்: தாயைப் போல வளர்த்து வந்த பெண் உயிரிழந்ததால் தற்கொலை செய்து கொண்ட நாய்
இதுபற்றி அமைச்சகம் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் சரியான நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாலும், விரைவாக கரோனா நோயாளிகளைக் கண்டறிவதாலும் நாள்தோறும் குணமடைவோர் விகிதம் உயர்ந்து வருகிறது.
நாட்டில் கரோனா பாதிப்பு இருபது ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இதன் காரணமாக நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6,25,544 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 379 பேர் கரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 18,213 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 20,033 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,79,891 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து குணமடைவோர் விகிதம் 60.73% ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் 2,26,947 பேர் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளனர். குணமடைந்தோர் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கையின் வித்தியாசம் 1,32,912 ஆக உள்ளது.
பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சையளித்தல் எனும் யுத்தியின் அடிப்படையில், பரிசோதனை எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,41,576 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 92,97,749 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள 775 அரசு ஆய்வகங்கள், 299 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 1,074 ஆய்வகங்கள் உள்ளன" என்று மத்திய சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.