ஆக்ராவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு: தாஜ் மகால் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் திறப்பு இல்லை
ஜூலை 6 முதல் திறக்கப்படுவதாக இருந்த சுற்றுலாத் தலங்கள், ஆக்ராவில் கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதை அடுத்து திறக்கப்படவில்லை.
ஆக்ரா: ஜூலை 6 முதல் திறக்கப்படுவதாக இருந்த சுற்றுலாத் தலங்கள், ஆக்ராவில் கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதை அடுத்து திறக்கப்படவில்லை.
ஆக்ராவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக, இன்று திறக்கப்படுவதாக இருந்த தாஜ்மகால், ஆக்ரா கோட்டை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள், அடுத்த உத்தரவு வரும் வரை திறக்கப்படாது என்று ஆக்ரா மாவட்ட நீதிபதி பிரபு சிங் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 4 நாள்களில் 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 71 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. எனவே, இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஆக்ராவுக்கு வரத் தொடங்கினால் மேலும் கரோனா தொற்றுப் பரவும் அபாயம் உள்ளதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக பிரபு சிங் கூறினார்.
முன்னதாக, ஜூலை 6 முதல் இந்திய தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படும் மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.