இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 61.13% ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அமைச்சகம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்ததாவது:
"நாடு முழுவதும் கரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கையை தொடர்ச்சியாக விரிவுபடுத்தியதன் விளைவாக இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 1.02 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.41 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் மொத்தம் 1,115 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில் அரசு பரிசோதனை ஆய்வகங்கள் 793, தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் 322. இன்றைய தேதியில் மொத்தம் 4,39,947 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக 1,80,390 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 61.13% ஆகியுள்ளது."