திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்குக்கும் கேரள அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர் சந்திப்பில் பினராயி விஜயன் தெரிவித்ததாவது:
"திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கு எந்த வகையில் மாநில அரசுடன் தொடர்புடையதாகும். அந்தப் பார்சல் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்துக்கு வந்தது. எந்தவொரு மாநில அரசு நிறுவனத்துக்கும் வரவில்லை. இதில் ஏதேனும் தவறு இருந்தால், அதற்கு மாநில அரசு எவ்வாறு பொறுப்புக்குள்ளாகும். மாநில அரசுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை.
அனைத்து விமான நிலையங்களும் மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. அனைத்து வசதிகளையும் மத்திய அரசே வழங்குகிறது. இதில் மாநில அரசால் எதுவும் செய்ய இயலாது. இது முழுக்க மத்திய அரசின் பொறுப்பாகும்.
இந்த வழக்கு தொடர்பாக திருவனந்தபுரத்தில் விசாரணை செய்யப்பட்டு வரும் பெண்ணுடன் முதல்வர் அலுவலகத்துக்கோ அல்லது ஐடி துறைக்கோ எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்தப் பெண் ஐடி துறையின் கீழ் ஒரு திட்டத்துக்கான சந்தைப்படுத்துதல் பிரிவு மேலாளராக ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றுகிறார். வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாகவே அவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்."