பாகிஸ்தான் தேசியக் கொடியையும், வரைபடத்தையும் பேஸ்புக்கில் பதிவிட்டதற்காக உத்தரப் பிரதேசத்தில் அரசு பல்கலைக்கழக பேராசிரியர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விஹெச்பி தலைவர் நீரு பரத்வாஜ் அளித்த புகாரின்பேரில் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
ரோஹில்கண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் சலிம் கான், மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் செவ்வாயன்று அவரது பேஸ்புக் பக்கத்தில் பாகிஸ்தானின் தேசியக் கொடி மற்றும் வரைபடம் புகைப்படங்களைப் பதிவிட்டதாக பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் ஆய்வாளர் பரதர் ஷிதான்ஷு சர்மா தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் அனில் குமார் சுக்லாவிடம் பேராசிரியர் மன்னிப்புக் கேட்டதாகவும், இதுபற்றி பல்கலைக்கழக நிர்வாகக் குழுவில் ஆலோசிக்கப்படும் என்று துணை வேந்தர் தெரிவித்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.