பாஜகவில் இணையுமாறு சச்சின் பைலட் எனக்கு பணம் கொடுத்தார்: காங்கிரஸ் எம்எல்ஏ
பாஜகவில் இணையுமாறு சச்சின் பைலட் தனக்கு பணம் கொடுத்ததாக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ கிரிராஜ் சிங் மலிங்கா குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜகவில் இணையுமாறு சச்சின் பைலட் தனக்கு பணம் கொடுத்ததாக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ கிரிராஜ் சிங் மலிங்கா குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த மலிங்கா தெரிவித்ததாவது:
"நான் சச்சின் பைலட்டுடன் பேசினேன். பாஜகவில் சேர அவர் எனக்குப் பணம் கொடுத்தார். ஆனால், நான் பாஜகவில் சேர முடியாது என்று மறுத்துவிட்டேன். எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தால்கூட நான் பாஜகவில் இணைய மாட்டேன்.
எனது பகுதி மக்களை நான் எப்படி எதிர்கொள்வேன்? அவர்களிடம் என்ன சொல்வேன் நான்?" என்றார் மலிங்கா.
இதைத் தொடர்ந்து, சச்சின் பைலட் பணம் கொடுத்தபோதே இதை ஏன் எழுப்பவில்லை என்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், "மாநிலங்களவைத் தேர்தலுக்கு முன்பு, இந்த அரசைக் கவிழ்ப்பதற்கான சதித் திட்டம் தீட்டப்படுவதாக அசோக் கெலாட்டை எச்சரித்தேன். நான் முதல்வரிடம் எந்தவொரு ஆடியோவையும் கொடுக்கவில்லை. எனக்கு ஆடியோவை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்றுகூட தெரியாது. எந்தவொரு விசாரணை அமைப்புக்கும் முன்பும் ஆஜராக நான் தயார்." என்றார்.