கரோனா பாதித்த பெண் விதிமுறைகளை மீறி ஐக்கிய அரபு நாட்டுக்குச் சென்றார்
புணேவுக்கு அருகே ஹின்ஜ்வாடி பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்மணிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் விதிமுறைகளை மீறி ஐக்கிய அரபு நாட்டுக்குச் சென்றுவிட
புணே: புணேவுக்கு அருகே ஹின்ஜ்வாடி பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்மணிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் விதிமுறைகளை மீறி ஐக்கிய அரபு நாட்டுக்குச் சென்றுவிட்டார்.
இதையடுத்து அவர் மீது பிம்ப்ரி சின்ச்வாத் சுகாதாரத் துறை தரப்பில் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த பெண்ணின் கணவர் ஐக்கிய அரபு நாட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பிம்ப்ரி சின்ச்வாத் நகராட்சிக்கு உள்பட்ட தனது குடியிருப்பில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டார்.
இந்த நிலையில், அவர் தனது குடியிருப்பில் இருந்து ஜூலை 17-ம் தேதி வெளியேறி, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றுள்ளார் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய அந்தப் பெண், பிம்ப்ரி சுகாதாரத் துறை அதிகாரிக்கு ஒரு தகவலை அனுப்பியுள்ளார். அதில், தான் ஷார்ஜ் வந்து சேர்ந்துவிட்டதாகவும், இங்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் தனக்கு தொற்று இல்லை என்று தெரிய வந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது கரோனா பரிசோதனை முடிவின் புகைப்படத்தையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
அவர் மீது விதிமுறைகளை மீறியதாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.