உடல் உறுப்பு தானத்தால் 8 பேருக்கு மறுவாழ்வு தந்த கேரள இளைஞர்
கேரளத்தில் மூளைச் சாவுற்ற இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 8 பேர் மறுவாழ்வு பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் மூளைச் சாவுற்ற இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 8 பேர் மறுவாழ்வு பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொட்டாரக்கரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனுஜித் (27). இவர் ஜூலை 17 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுஜித் பின் மேல் சிகிச்சைக்காகத் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மூளைச் சாவுற்றார்.
இந்த நிலையில், அனுஜித்தின் குடும்பத்தினர் அவரின் இதயம், சிறுநீரகம் மற்றும் கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனர்.
பின் மாநில முதல்வர் பினராய் விஜயனின் அறிவுறுத்தலின் பேரில் மாநில அரசின் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் அனுஜித்தின் உடல் உறுப்புகள் கொச்சிக்குக் கொண்டு வரப்பட்டு உரிய நபர்களுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டன.
இதன் மூலம் 8 பேர் மறுவாழ்வு பெற்றனர். அனுஜித் குடும்பத்தினரின் இந்த முன்மாதிரியான நடவடிக்கைக்கு பல தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அனுஜித்தின் இறப்பிற்கு ஆறுதல் தெரிவித்ததுடன் உறுப்பு தானம் செய்ய முன்வந்த அவரின் உறவினர்களின் செயல் முன்மாதிரியானது என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா டீச்சர் பாராட்டியுள்ளார்.