பிகார் மாநிலம் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நேரத்தில் முதல்வர் நிதிஷ் குமார் எங்கும் தென்படவில்லை என ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜெடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
பிகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட தேஜஸ்வி யாதவ், அங்கிருந்த மக்களுக்கு உணவு விநியோகம் செய்தார். அப்போது ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவிக்கையில், "கரோனா, சட்டம் ஒழுங்கு அல்லது வெள்ளம் என எதுவாக இருந்தாலும், பிகாரில் நிலைமை மோசமடைந்துள்ளது. முதல்வர் நிதிஷ் குமாரைக் காணவில்லை." என்றார்.
இதனிடையே ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், "எதிர்க்கட்சிகளுக்கு கரோனாவோ, வெள்ளமோ பிரச்னை இல்லை. தங்களது தோல்விகளை மறைப்பதற்காகவே அவர்கள் நிதிஷ் குமாரைத் தாக்குகின்றனர். அழியும் நிலையிலிருந்த சுகாதாரக் கட்டமைப்பை, கரோனாவை எதிர்கொள்ளும் அளவுக்கு எவ்வாறு நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறோம் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு பேரிடர் மேலாண்மையின் முடிவுகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்." என்றார்.
முன்னதாக, கடந்த 3 நாள்களாக பெய்த தொடர்மழையால் சீதாமர்ஹி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (புதன்கிழமை) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.