ஊரடங்கு காலத்தில் ஐந்தரை லட்சம் சிக்கன் பிரியாணி ஆர்டர்கள்!
இந்தியர்கள் ஊரடங்கு காலத்தில் ஐந்தரை லட்சம் சிக்கன் பிரியாணிகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புது தில்லி: இந்தியர்கள் ஊரடங்கு காலத்தில் ஐந்தரை லட்சம் சிக்கன் பிரியாணிகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வீட்டிற்கே வந்து உணவை வழங்கும் பிரபல ஸ்விக்கி நிறுவனம் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊரடங்கு காலத்தில் உணவு தவிர காய்கறிகளையும் வீட்டிற்கு வந்து வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ள நாங்கள், சுமார் 32.3 கோடி கிலோ வெங்காயங்களையும், 5.6 கோடி வாழைப்பழங்களையும் இந்த காலகட்டத்தில் டெலிவரி செய்திருக்கிறோம்.
Advertisement
ஒவ்வொரு நாளும் இரவு உணவுக்காக சராசரியாக 65,000 ஆர்டர்கள் எங்களுக்கு வருவது வழக்கம்.
இனிப்பு வகைகளை பொறுத்த அளவில் சுமார் 1,29,000 சாகோ லாவா கேக்குகளை நாங்கள் டெலிவரி செய்துள்ளோம். அதற்கு அடுத்த இடங்களை குலாப் ஜாமுன் மற்றும் சிக் பட்டர்ஸ்காட்ச் மவுஸ் கேக் பிடித்துள்ளது
அத்துடன் 1,20,000 பிறந்தநாள் கேக்குகளையும் நாங்கள் இந்த சமயத்தில் டெலிவரி செய்துள்ளோம்
கரோனா தொற்றைத் தடுக்கும் பொருட்டு 73,000 சானிடைசர் பாட்டில்கள், 47,000 முகக் கவசங்களும் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.
ஆனால் முக்கிய உணவு வகைகளை பொறுத்தவரை சிக்கன் பிரியாணியினை அசைக்க முடியவில்லை. இந்தியர்கள் ஊரடங்கு காலத்தில் ஐந்தரை லட்சம் சிக்கன் பிரியாணிகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.
அவசர உணவுத் தேவைக்காக பயன்படுத்தப்படும் உணவுப் பதார்த்தமான ‘உடனடி நூடுல்ஸ்’ பாக்கெட்டுகள் 3,50,000 என்ற அளவில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.