வீடில்லாத மனநோயாளிகளுக்கு கரோனா பரிசோதனையின்போது அடையாள அட்டை கோர வேண்டாம்: உயர் நீதிமன்றம்
வீடற்ற மனநோயாளிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது, செல்லிடப்பேசி எண், வீட்டு முகவரி, ஆதார் அட்டை போன்றவற்றைக் கோர வேண்டாம் என்று ஐசிஎம்ஆர்-க்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புது தில்லி: வீடற்ற மனநோயாளிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது, செல்லிடப்பேசி எண், வீட்டு முகவரி, ஆதார் அட்டை போன்றவற்றைக் கோர வேண்டாம் என்று ஐசிஎம்ஆர்-க்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது, தனி நபர் தனது செல்லிடப்பேசி எண், அடையாள அட்டை, முகவரிச் சான்று, புகைப்படம் போன்றவற்றை அளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி ஐசிஎம்ஆர் விதிமுறைகளை வகுத்து வெளியிட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டீல், நீதிபதி பிரதீக் ஜலன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வீடில்லாத மனநோயாளிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது செல்லிடப்பேசி எண், அடையாள அட்டை, முகவரிச் சான்றி போன்றவற்றைக் கோரக் கூடாது என்று சுற்றறிக்கை மூலமாகவோ, அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு மூலமாகவோ அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
தில்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.