புது தில்லி: நாட்டில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 21 நாள்கள் ஆனது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்தியாவில் கரோனா பாதித்து குணமடைவோர் விகிதம் 64.54% ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலமும் 21 நாள்களாக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்கலாம்.. நியூ யார்க்கில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் நாய் மரணம்
நாட்டில் ஒரு பக்கம், 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 55,079 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 779 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு 16,38,871 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 5,45,318 ஆக உள்ளது. இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 35 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நாளுக்கு நாள் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், குணமடைவோர் விகிதமும் மெல்ல உயர்ந்து வருவது நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது.