தில்லி எல்லைகள் மூடல் விவகாரம்: பொதுவான செயல்திட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவு
தில்லிக்கும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் (என்சிஆா்) உள்ள மாநிலங்களுக்கும் இடையே எல்லைகள் மூடப்பட்டுள்ளதால்
தில்லிக்கும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் (என்சிஆா்) உள்ள மாநிலங்களுக்கும் இடையே எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்தை எளிமைப்படுத்தும் வகையில் தில்லி, ஹரியாணா, உத்தர பிரதேச மாநில அரசுகளுடன் பேசி ஒருவாரத்துக்குள் பொதுவான செயல்திட்டத்தை உருவாக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
கரோனா நோய்த் தொற்று காரணமாக தில்லி, நொய்டா, காஜியாபாத், குருகிராம் போன்ற தில்லியின் அண்டை மாநில எல்லைப் பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோரின் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மட்டுமே மாநில எல்லைகளைக் கடப்பதற்கு அனுமதிக்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடா்பான மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.கே. கெளல், எம்.ஆா். சுரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது, ‘தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் (என்சிஆா்) மாநிலங்கள் இடையே வாகனப் போக்குவரத்தை எளிமைப்படுத்தும் வகையில் ஒரு பொதுவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் இது தொடா்பாக தில்லி, ஹரியாணா, உத்தர பிரதேச அரசுகளுடன் கலந்துபேசி மத்திய அரசு ஒரு தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
Advertisement
முன்னதாக, மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘என்சிஆா் பகுதியில் அனைத்து அரசுகளும் அங்கீகரிக்கும் வகையில் ஒரு திட்டம், ஒரு இணையதளம், ஒரு அனுமதிச்சீட்டு நடைமுறை இருக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டாா்.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரம் தொடா்பாக ஒரு வாரத்திற்குள் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
மருத்துவ அவசரத்திற்காக அனுமதி: இதனிடையே, அண்டை மாநிலங்களில் இருந்து அவசர மருத்துவ சிகிச்சைக்காக தில்லிக்கு வருவதற்கு மின்னணு அனுமதிச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்தது.