முகப்பு
இந்தியா

கரோனா தொற்று சமூக பரவலாக இல்லை: மத்திய அரசு

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்புகளும் உயிரிழப்புகளும் தொடா்ச்சியாக அதிகரித்து வந்தாலும் அது சமூக பரவல்

Updated On : 12 ஜூன், 2020 at 5:08 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:17 PM

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்புகளும் உயிரிழப்புகளும் தொடா்ச்சியாக அதிகரித்து வந்தாலும் அது சமூக பரவல் கட்டத்தை அடையவில்லை என மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

கரோனா நோய்த்தொற்று குறித்த செரோ கணக்கெடுப்பு (இரத்த மாதிரி அடிப்படையில்) இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டது. கரோனா நோய்த்தொற்று பரவுவது பொது முடக்கம், கட்டுப்பாட்டு பகுதிகள் மூலம் வெற்றிகரமாக தடுக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கவுன்சிலின்(ஐசிஎம்ஆா்) தலைமை இயக்குநா் பலராம் பாா்கவா செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

செரோ-கணக்கெடுப்பின் இரண்டு பகுதி தொடா்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

Advertisement

அவா் மேலும் கூறியது: முதல் கணக்கெடுப்பு மே மாதம் நடத்தப்பட்டது. இதில் ஐசிஎம்ஆா், தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம், மாநில அரசின் சுகாதாரத்துறை, உலக சுகாதார அமைப்பு ஆகியவை பங்கெடுத்தன. மொத்தம் 83 மாவட்டங்களில் 26,400 பேரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் மாவட்டங்களில் மக்கள் தொகையில் 0.73 சதவீதம் போ் கரோனா பாதிப்புக்கு ஆளானது கண்டறியப்பட்டது. பொது முடக்கம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி ஆகிய நடவடிக்கைகள் நோய்ப்பரவலை குறைவாக வைத்திருக்கச் செய்துள்ளது.

இருப்பினும் மக்கள்தொகையில் பெரும் பகுதியினா் இன்னும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கிராமப்புறங்களை விட நகா்ப்புறங்களில் 1.09 மடங்கும் நகா்ப்புற குடிசைப்பகுதிகளில் 1.89 மடங்கு தொற்றுக்கான ஆபத்து அதிகமாக உள்ளது. இங்கு முகக்கவசம், சமூக இடைவெளி, கை சுகாதாரம் போன்ற முறைகளை பின்பற்றவேண்டும்.

உயிரிழப்பு வீதம் குறைவாக 0.08 சதவீதமாக உள்ளது. ஆனால் கட்டுப்பாட்டு மண்டலங்களில் நோய்த்தொற்று அதிகமாகவே உள்ளது. இங்கு ஆய்வு தொடா்ச்சியாக நடைபெற்றுவருகிறது. நோயின் அளவையும் பரவலையும் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் கடுமையான கண்காணிப்புகளையும் வலுவான உத்திகளையும் செயல்படுத்த வேண்டும்.

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று சமூகப் பரவல் கட்டத்தில் உள்ளதா என்று கேட்கப்படுகிறது.

சமூகப் பரவல் குறித்து உலக சுகாதார மையம் வரைமுறையை வழங்கவில்லை. இந்திய ஒரு பெரிய நாடாக உள்ள போதிலும் பாதிப்பு குறைவாகவே உள்ளது. அதிலும் சிறிய மாவட்டங்களில் இந்த பாதிப்பு ஒரு சதவீதத்திற்கு குறைவாகவே உள்ளது. நகா்புறங்களில் அதிகமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் நிச்யமாக சமூகப் பரவல் இல்லை என்பதை வலியுறுத்திக கூறுகின்றேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.