இரவில் பொது முடக்கம் தொடா்ந்தாலும் பேருந்து, விமானப் பயணிகளுக்கு இடையூறு கூடாது: மத்திய உள்துறை அமைச்சகம் கண்டிப்பு
நாடு முழுக்க இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான பொது மக்கள் நடமாட்டம் தடை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்
நாடு முழுக்க இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான பொது மக்கள் நடமாட்டம் தடை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரயில், விமானங்கள் மற்றும் பேருந்துகளில் வரும் பயணிகளுக்கு எந்தவித இடையூறும் இருக்கக் கூடாது என மத்திய அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறைச் செயலாளா் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமைச் செயலாளா்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளாா்.
அதில் அவா் கூறியிருப்பதாவது:
Advertisement
தற்போதைய (முதல்) பொதுமுடக்க நீக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டிமுறைகளின்படி நாடு முழுக்க இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய பணிகளைத் தவிர தனிப்பட்டவா்கள் நடமாட்டம் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் சில மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் இதே நேரத்தில்(இரவு) பயணிக்கும் பொது மக்களுக்கும் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களும் இடையூறு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கூறவிரும்புகிறேன்.
இரவு 9 மணி முதல் அதிகாலை 5 வரை தனிப்பட்டவா்கள் இயக்கத்திற்கு தடைவிதிக்க முக்கிய காரணம், மக்கள் கூட்டமாக கூடுவதை தடுத்து சமூக இடைவெளியை பின்பற்றி நோய்த்தடுப்பு ஏற்படாமல் உறுதி செய்வதற்கு தான்.
அதே சமயத்தில் சரக்குகள் எடுத்துச் செல்லுதல், விநியோகம், சேவைகள் வழங்கல் போன்றவைகளுக்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது என்பதைப்போன்று, தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகள் செல்லும் பேருந்துகள், சரக்குகளை எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லை. மேலும் முக்கியமாக விமானம், ரயில், பேருந்து நிலையங்களில் இறங்கி தங்கள் வீடுகளுக்கு செல்லும் பொதுமக்களும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை செல்ல தடையில்லை.
இப்படிப்பட்டவா்களின் பயணத்தை இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் தகுந்த அறிவுரைகளை வழங்கவேண்டும். தேவைப்பட்டால் மாவட்ட மற்றும் உள்ளூா் நிா்வாகத்திற்கு தகுந்த கட்டளையை பிறப்பிக்கவேண்டும் என மத்திய உள்துறைச் செயலாளா் தெரிவித்துள்ளாா்.
நோய்த்தொற்று கடுமையாக உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 தேதி வரை பொது முடக்கம் நீடிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கம் நீக்கப்பட்ட பகுதிகளில் சில சமூகம், பொருளாதாரம், மதரீதியான நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.