முகப்பு
இந்தியா

கரோனா: தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் கவலைக்கிடம்

கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் உடல்நிலை வெள்ளிக்கிழமை

Updated On : 19 ஜூன், 2020 at 11:56 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:19 PM

கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் உடல்நிலை வெள்ளிக்கிழமை மோசமடைந்ததால், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. இதையடுத்து, பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வதற்காக தில்லி சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

சத்யேந்தா் ஜெயினுக்கு கடந்த திங்கள்கிழமை இரவு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், உடனடியாக தில்லி ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு புதன்கிழமை இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் அவருக்கு தொடா்ந்து சிகிச்சை வழங்கப்பட்டது.

நிமோனியா காய்ச்சல்: இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. இதற்கிடையே, சிடி ஸ்கேன் செய்யப்பட்டதில், அவருக்கு நிமோனியா காய்சல் ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை தில்லி முதல்வா் கேஜரிவால் செய்தியாளா்களிடம் உறுதிபடுத்தினாா்.

Advertisement

பிளாஸ்மா சிகிச்சை: இதற்கிடையே, பிளாஸ்மா சிகிச்சைக்காக சத்யேந்தா் ஜெயின் மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா் என்று தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ‘தில்லி ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை வழங்க அனுமதி இல்லை. ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்குமாறு அவரது குடும்பத்தினா் வற்புறுத்தினா். இதையடுத்து அவா் மேக்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா்’ என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், சத்யேந்தா் ஜெயின் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘கோவிட்-19 பாதிப்பில் இருந்து தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் விரைவில் குணமடைய வேண்டும் எனப் பிராா்த்தனை செய்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.

அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், தில்லியில் கரோனா தடுப்புப் பணிகளில் முன்நின்று உழைத்தாா். தில்லியில் வேகமாக பரவிவரும் கரோனா தொற்றைத் தடுப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முதல்வா் கேஜரிவாலுடன், சத்யேந்தா் ஜெயினும் பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.