மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இதுவரை 51 காவலர்கள் பலியாகியிருப்பதாக, காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலம் மகாராஷ்டிரம்தான். அங்கு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களும் இந்த நோய்த் தொற்றுக்கு அதிகளவில் ஆளாகின்றனர். இதுவரை நோய்த் தொற்றால் 51 காவலர்கள் பலியாகியிருப்பதாக காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் இன்று (புதன்கிழமை) தெரிவித்ததாவது:
"கரோனா தொற்று தொடங்கியதிலிருந்து இதுவரை 4,000 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 998 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இரண்டு அதிகாரிகள் உள்பட இதுவரை மொத்தம் 51 காவலர்கள் கரோனா தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, காவலர்கள் மீது 279 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 86 காவலர்கள் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக 858 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலகட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மீது 52 தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கரோனா தொற்றுக்கு எதிரான போரில் முன்நின்று பணியாற்றி வருபவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.