தில்லி வன்முறை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு
வடகிழக்கு தில்லியில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு தில்லியில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு தில்லி பகுதியில் கடந்த வாரம் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்கும் குழுவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்தது. பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சால் இந்த வன்முறை வெடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு, இதுதொடர்பான வழக்கும் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும், காவல் துறையினர் சில இடங்களில் வன்முறைத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
இந்நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) 52 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குரு டெக் பஹதூர் மருத்துவமனையில் இருந்து 1 பெண் உட்பட 44 பேரும், எல்என்ஜேபி மருத்துவமனையில் இருந்து 3 பேரும், ஆர்எம்எல் மருத்துவமனையில் இருந்து 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதேசமயம், ஹோலி பண்டிகைக்குப் பிறகு இதுகுறித்து விவாதிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.