ஆட்சியில் பங்கு என்றபோதிலும், விஜய் தனித்து விடப்பட்டார்: சீமான்
ஆட்சியில் பங்கு என்றபோதிலும், தவெகவுடன் கட்சிகள் கூட்டணி வைக்கவில்லை என்று சீமான் பேசியது குறித்து...
ஆட்சியில் பங்கு என்றபோதிலும், தவெகவுடன் கட்சிகள் கூட்டணி வைக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசுகையில், "கூட்டத்தோடு நிற்பதற்கு யாருக்கும் வீரமும் துணிவும் தேவையில்லை. தனித்து நிற்கவே வீரமும் துணிவும் தேவை.
நாங்கள் வீரர்கள் என்பதால், தனித்து நிற்கிறோம். நாங்கள் மக்களை முழுமையாக நம்புகிறோம். அவர்கள் கட்சியையும் தலைவர்களையும் நம்புகிறார்கள்.
விஜய் தனித்து நிற்பதாய் சொல்லவில்லை. ஆட்சியில் பங்கு தருவதாய் எல்லோரையும் அழைத்துப் பார்த்தார். யாரும் வராததால் தனித்து விடப்பட்டார்.
வரும்போதே ஆட்சியில் பங்கு என்றுதான் வந்தீர்கள். காங்கிரஸ் உள்பட பல கட்சிகளை எதிர்பார்த்தீர்கள். ஆனால், யாரும் வரவில்லை" என்று தெரிவித்தார்.
ஆட்சியில் பங்கு தருவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்தபோதிலும், தவெகவுடன் கூட்டணி வைக்க கட்சிகள் தயங்குவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனிடையே, தவெகவும் காங்கிரஸும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் அவ்வப்போது சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இருப்பினும், காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் அளிப்பதாக திமுக ஒப்புக்கொண்டதையடுத்து, தவெக - காங்கிரஸ் கூட்டணி என்ற கருத்து முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்யின் தவெக இணையவிருப்பதாகவும் சமீபமாக சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.