கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணை: சிபிஐ அலுவலகத்தில் விஜய் இன்று ஆஜராகிறார்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு விசாரணைக்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 15) ஆஜராவது குறித்து...
புது தில்லி: 2025 கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு விசாரணைக்காக நடிகரும் தவெக தலைவருமான விஜய் ஞாயிற்றுக்கிழமை தில்லி மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்.27-ஆம் தேதி பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சுயாதீன விசாரணை கோரி தமிழக வெற்றி கழகம் மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் அந்த மனுவை ஏற்றுக்கொண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது
சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று போ் கொண்ட மேற்பாா்வைக் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் கரூரில் முகாமிட்டு சிபிஐ பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரிக்க தவெக நிர்வாகிகளுக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியது. இதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர்கள் ஆஜராகினர்.
நிர்வாகிகளைத் தொடர்ந்து கடந்த ஜன.12 ஆம் தேதி தில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் முதல் சுற்று விசாரணைக்கு ஆஜரானார். அன்றைய தினம் ஆறு மணி நேரங்களுக்கும் மேலாக விஜய்யின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடா்ந்து ஜன.19 ஆம் தேதி இரண்டாம் சுற்று விசாரணைக்கு ஆஜரான விஜய்யிடம் 6 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மூன்றாவது சுற்று விசாரணைக்கு மார்ச் 10 ஆம் தேதி ஆஜராகுமாறு மீண்டும் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. கட்சி பணி காரணமாக 15 நாள்கள் அவகாசம் கோரியிந்த நிலையில் மார்ச் 15 ஆம் தேதி ஆஜராகுமாறு சிபிஐ உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து சிபிஐயின் மூன்றாவது சுற்று விசாரணைக்காக விஜய் சனிக்கிழமை மாலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு, தில்லி சென்றடைந்தாா். அவருடன் கட்சி நிர்வாகிகள் 7 பேரும் சென்றுள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் தில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 15) ஆஜராகிறார்.
முன்னதாக, நடிகரும் அரசியல்வாதியான விஜய்யின் ஆதரவாளா்கள் பெருமளவில் கூடுவாா்கள் என்பதை எதிா்பாா்த்து, எந்தவிதமான போராட்டங்களையும் தடுப்பதற்காக, தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளின் பல பிரிவுகள் சிபிஐ அலுவலகக் கட்டடத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
செப்டம்பா் 27 ஆம் தேதி கரூா் தோ்தல் பிரச்சார நிகழ்வு திட்டமிடப்பிட்ட விதம் மற்றும் கூட்டம் நடத்தப்பட்ட விதம் ,கரூா் கூட்டத்தில் இருந்த குறைபாடுகள் ,சுமாா் 10,000 போ் மட்டுமே அனுமதிக்கப்படும் வேலூசாமிபுரம் நிகழ்விடத்தில் ஏராளமானோா் கூடியது எப்படி?, அதில் என்னென்ன விதிமீறல் நடந்தது , இந்தக் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்,கரூா் கூட்டத்திற்கான அனுமதி பெறப்பட்ட விதம், கூட்டத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதா?, கூடியிருந்தவா்களுக்கு உணவு, தண்ணீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டதா?, கூட்டம் நடத்தப்பட்ட பகுதியில் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் போன்ற அடிப்படை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா?, மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து விஜய் பிரச்சார நிகழ்வு குழுவினர் ஏதேனும் முன் ஆபத்தை மேற்கொண்டார்களா?, உள்ளூர் போலீசாருடன் போதுமான ஒருங்கிணைப்பு இருந்ததா?, நெரிசல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களை விஜய் எப்போது அறிந்தார்?, கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அவர் எப்போது வந்தார்?, எப்போது அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டார்? மற்றும் கூட்டத்தைக் கலைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.