திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த 3 வயதுக் குழந்தைக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலம் முழுவதும் உச்சபட்ச எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கேரளத்தில் ஐந்து பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 3 வயதுக் குழந்தைக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரளாவில் மட்டும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வரும் மேலும் சிலருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த குழந்தையின் குடும்பத்தோடு தொடர்பில் இருந்த 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனைக்கான முடிவுகள் இன்னும் தெரியவரவில்லை.
இந்த குழந்தை, தனது பெற்றோருடன் இத்தாலி சென்றுவிட்டு மார்ச் 7ம் தேதி கேரளம் திரும்பியிருப்பது தெரிய வந்துள்ளது.
குழந்தைக்கு கரோனா அறிகுறி தென்பட்டதுமே, குழந்தையின் பெற்றோரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். குழந்தைக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
முன்னதாக, கேரள மாநிலம் கரோனா வைரஸ் பாதித்தவர்களில் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த மூன்று பேர், இத்தாலி சென்று விட்டு வந்ததை விமான நிலையத்தில் மறைத்துவிட்டு மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளாமல் வந்தது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றிருப்பதால், அங்கு மருத்துவக் குழுவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.