மத்தியப் பிரதேசத்தில் நாளை (மார்ச் 15) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டனைச் சந்தித்து பாஜக மனு அளித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகியதையடுத்து, அவரது ஆதரவாளர்களாக அறியப்படும் 22 எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இதன் காரணமாக கமல்நாத் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் மத்தியப் பிரதேசத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. எனவே, பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனைச் சந்தித்து பாஜக இன்று மனு அளித்தது.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சௌஹான் பேசியதாவது:
"22 எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்துள்ளனர். விடியோக்கள் மூலம் தங்களது ராஜிநாமாக்களை அவர்கள் உறுதி செய்துள்ளனர். தற்போது கமல்நாத் அரசு சிறுபான்மை அரசாக உள்ளது. ஆட்சியில் தொடருவதற்கு இந்த அரசுக்கு அரசியலமைப்பு சட்டப்படி உரிமை இல்லை.
ஆளுநர் உரைக்கும், பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் எந்த அர்த்தமும் இல்லை என்று அவரிடம் தெரிவித்துள்ளோம். எனவே, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்" என்றார்.