ஊரடங்கை மீறுபவர்களுக்கு ஜம்மு போலீசாரின் விநோத தண்டனை
கரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறுபவர்களுக்கு ஜம்மு போலீசார் விநோத தண்டனை ஒன்றை வழங்கி வருகின்றனர்.
ஜம்மு: கரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறுபவர்களுக்கு ஜம்மு போலீசார் விநோத தண்டனை ஒன்றை வழங்கி வருகின்றனர்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 681 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 13 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டு போலீசாரிடம் தண்டனை பெற்று வருகின்றனர்.
Advertisement
இந்நிலையில் கரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறுபவர்களுக்கு ஜம்மு போலீசார் விநோத தண்டனை ஒன்றை வழங்கி வருகின்றனர்.
இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொதுவாக இதுபோன்ற தருணங்களில் வாகனம் ஓட்டி பிடிபடுபவர்கள் ஒரு நாளில் ஒரு முறைதான் வெளியே வந்தோம் அல்லது அவசர வேலை என்று கூறுவது வழக்கம். ஆனால் பெரும்பாலானோர் எந்த வித காரணங்களும் இன்றி வெறுமனே சுற்றுபவர்கள்தான்.
எனவே அவர்களைத் தடுக்க அவ்வாறு பிடிபடுபவர்களது கைகளில் நாங்கள் “ஊரடங்கு உத்தரவை மீறியவர்“ என்ற முத்திரையை இடுகிறோம். இதை அவர்கள் முயன்றாலும் இரண்டு மாதங்களுக்கு அளிக்க இயலாது. இத்தகைய நபர்கள் மீண்டும் பிடிபட்டால் தகுந்த சட்டபிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். நாங்கள் யாரையும் துன்புறுத்துவதில்லை. எங்களால் இயன்ற அளவிற்கு அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் இதுவரை 19 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.