பெங்களூருவில் போலி முகக்கவச மோசடி: ஒருவர் கைது
பெங்களூருவில் போலி முகக்கவச மோசடியில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு: பெங்களூருவில் போலி முகக்கவச மோசடியில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1251 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 32 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசங்களை அணியுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் முழுமையான பாதுகாப்புத் தரும் N95 ரக முகக்கவசங்கள் சந்தையில் அத்தனை எளிதாக கிடைப்பதில்லை. அத்துடன் பலரும் முககவசங்களை கடுமையான விலைக்கு விற்று சம்பாதித்து வருகின்றனர்.
Advertisement
இந்நிலையில் பெங்களூருவில் போலி முகக்கவச மோசடியில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பெங்களூரு காவல்துறை இணை ஆணையர் குல்தீப் ஜெயின் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியதாவது:
பெங்களூரு பனஸ்வாடி பகுதியைச் சேர்ந்த அஸ்கர் (40) மற்றும் அவரது முதலாளி அமீர் அர்ஷாத் (40) ஆகிய இருவரும் போலி முகக்கவசங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சாதாரணத் துணியில் முகக்கவசங்களைத் தயாரித்து, அதை N95 என்று கூறி போலி நிறுவனம் ஒன்றில் பெயரால் விற்பனை செய்துள்ளனர்.. இதனை அவர்கள் மருந்துக்கடைகள் உள்ளிட்டவைகளுக்கு ரூ.500 என்ற விலையில் விற்பனை செய்து இந்த தருணத்தைப் பயன்படுத்தி சம்பாதித்துள்ளனர். காவல்துறை நடவடிக்கையில் அர்ஷாத் தப்பி விட்ட நிலையில் அஸ்கர் மட்டும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்களிடம் இருந்து 12,000 முகககவசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார் .