இலங்கை கடற்கொள்ளையனை சிறை பிடித்து வந்த தமிழக மீனவர்கள்!
நடுக்கடலில் மீன்பிடி வலையை அறுக்க முயன்றதாக இலங்கை கடற்கொள்ளையனை தமிழ்நாட்டு மீனவர்கள் சிறை பிடித்தது...
நடுக்கடலில் மீன்பிடி வலையை அறுக்க முயன்றதாக இலங்கை கடற்கொள்ளையனை தமிழ்நாட்டு மீனவர்கள் சிறை பிடித்து வந்துள்ளனர்.
நாகைப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த செருதூரை சேர்ந்த 5 பேர் ஞாயிற்றுக்கிழமை ஆற்காட்டுகத்துறைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, அங்கு ஸ்பீட் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் என கூறப்படும் மீனவர்கள் 3 பேர் தமிழ்நாட்டு மீனவர்களின் வலையை அறுக்க முயன்றதுடன் மீனவர்களின் பொருள்களையும் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
Advertisement
உடனடியாக தமிழக மீனவர்கள் சுதாரித்துக் கொண்ட நிலையில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், இலங்கையில் இருந்த வந்த 3 கடற்கொள்ளை மீனவர்களில் 2 பேர் ஸ்பீட் இன்ஜின் பொருத்தப்பட்ட படகில் தப்பியோடிய நிலையில், இலங்கையைச் சேர்ந்த அயந்தன்(27) என்பவரை தமிழக மீனவர்கள் சிறை பிடித்து செருதூர் கடற்பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.
இதனிடையே, காயமடைந்த தமிழக மீனவர்கள் 5 பேரும் முதலுதவி சிகிச்சைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிறை பிடிக்கப்பட்டுள்ள இலங்கை கடற்கொள்ளையன் அயந்தன் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்களின் வலையை அறுக்க முயன்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேரில் ஒருவரை சிறை பிடித்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.