புது தில்லி: புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் பயணத்திற்கு ரயில்வே 85 சதவீதமும் மாநில அரசு 15 சதவீதமும் கட்டணத்தை செலுத்துவதால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றி ஒரு போதும் பேச்சு எழவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கையொட்டி சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களிடம் ரயில்வே கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் கூறப்பட்டது. இதற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறியதாவது:
புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்றுதான் தொற்று நோய் குறித்த வழிகாட்டி வரைமுறைகள் தெளிவாகக்கூறுகிறது. சில குறிப்பிட்ட காரணங்களுக்கு மாநில அரசுகளின் வேண்டுகோளின்படி சிக்கித்தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்திற்கு சிறப்பு ரயில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் குறைந்த எண்ணிக்கைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் மத்திய அரசு அல்லது ரயில்வே துறை தொழிலாளர்களிடமிருந்து கட்டணத்தை வசூலிக்கும் என்று கூறியதில்லை. இந்த சிறப்பு ரயில் பயணத்திற்கு ரயில்வே துறை 85 சதவீதத்தை ஏற்கும். மீதமுள்ள 15 சதவீதத்தை மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.