பாட்னா: ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருவதால், இந்திய தொழில்துறை விரைவில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சிரமப்பட நேரிடும்.
ஊரடங்கு உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள்தான். இருக்க இடமில்லாமல், உண்ண உணவில்லாமல், கையில் காசில்லாமல், போக்குவரத்து வசதியில்லாமல், வெறும் கால்களை மட்டுமே நம்பி ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் நடந்தே சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் ஏராளம்.
அதில்லாமல், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு நிறுவனங்கள், தெழிற்சாலைகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்ட போது, தங்களது முதலாளிகள், தங்களை நடத்திய விதத்தால் மனம் நொந்து போன புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும், உயிரையேப் பணயம் வைத்துதான் சொந்த ஊர் நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
சைக்கிளிலும், கிடைத்த வாகனங்களில் ஏறியும், ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் நடந்தே ஊர் வந்து சேர்ந்த பிகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலரும், எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் அங்கு செல்ல மாட்டோம் என்கிறார்கள் உறுதியாக.
இவர்கள், ஹரியாணா, மகாராஷ்டிரம் போன்ற பல்வேறு அண்டை மாநிலங்களில் பணியாற்றி, ஊரடங்கு உத்தரவால் அனைத்து வகையிலும் கைவிடப்பட்டு, வீடு வந்து சேர்ந்தவர்கள்.
1,500 முதல் 1,800 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று சொந்த ஊரை அடைந்த தொழிலாளர்கள் ஏராளம். வெறும் 'உப்பையும் ரொட்டியையும் வைத்துக் கொண்டு என் வீட்டிலேயே சாப்பிட்டாலும் சாப்பிடுவேன், மீண்டும் அங்குச் செல்ல மாட்டேன்' என்கிறார் மகாராஷ்டிரத்தில் இருந்து பிகாருக்கு நடந்தே சென்ற கிருஷ்ண குமார் என்ற தொழிலாளி.
ஒன்றறை மாத காலம் நாங்கள் பட்ட துன்பத்தை வாழ்நாளில் மறக்கவே முடியாது. தெரு நாய்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்டோம் என்கிறார் மேலும் அவர்.
இதேக் கருத்தைத்தான் ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது அனுபவத்துடன் சேர்த்து சொல்கிறார்கள் வேறு வேறு வார்த்தைகளுடன்.