உ.பி.யில் கரோனாவில் இருந்து மீண்ட இளைஞர் பிளாஸ்மா தானம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனாவில் இருந்து மீண்ட 21 வயது இளைஞர் தனது பிஸ்மாவை தானமாக அளித்துள்ளதாக கே.ஜி.எம்.யூ மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனாவில் இருந்து மீண்ட 21 வயது இளைஞர் தனது பிஸ்மாவை தானமாக அளித்துள்ளதாக கே.ஜி.எம்.யூ மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கரோனா தீநுண்மி தொற்றிலிருந்து குணமடைந்தவரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா என்ற திரவத்தை எடுத்து, சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளியின் உடலில் செலுத்தப்படும். இதன் மூலம் பிளாஸ்மா செலுத்தப்பட்ட நோயாளிக்கு எதிர்ப்புச் சக்தி அதிகரித்து கரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய முடியும். ஏற்கெனவே பல மாநிலங்களில் பிளாஸ்மா சிகிச்சை முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், லக்னௌவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, பிளாஸ்மா தானம் பெறுவது தொடங்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த யஷ் தாக்கூர் என்ற இளைஞர்,வெள்ளிக்கிழமை இரவு தனது பிளாஸ்மாவை தானமாக வழங்கியுள்ளார்.
Advertisement
Advertisement
அந்த மருத்துவமனையில் கரோனாவால் குணமடைந்த ஏழு பேர் தங்களது பிளாஸ்மாவை தானமாக அளித்துள்ளனர். அதை பிளாஸ்மா வங்கியில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஒரு வருடத்திற்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இதைப் பயன்படுத்தி சிகிச்சை செய்துகொள்ளலாம் என்று மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 27 அன்று, ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த 58 வயது பெண் முதல் நபராகத் தனது பிளாஸ்மாவை கே.ஜி.எம்.யூ மருத்துவமனைக்குத் தானமாக வழங்கியுள்ளார். இவர் கனடாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஆவார். கரோனாவில் இருந்த மீண்ட அவர் மாரடைப்பால் மே 9 அன்று காலமானார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 5,667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2,332 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,335 பேர் நோயிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளனர். இந்நோய்க்கு மொத்தம் 152 பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.