முகப்பு
இந்தியா

பால் வாங்க அலைந்த தந்தை; ரயிலிலேயே 4 வயது குழந்தை உயிரிழந்த சோக சம்பவம்!

பிகாரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில், பால் கிடைக்காததால் 4 வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

பிகாரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் பால் கிடைக்காததால் 4 வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் தங்கள் உடைமைகளுடன் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. பலர் சிறப்பு ரயில்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். 

ஆனால், அவ்வாறு புலம் பெயரும் தொழிலாளர்கள் வறுமை, பசி காரணமாக இறக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சமீபத்தில் முசாபர் நகர் ரயில் நிலையத்தில் தாய் இறந்தது தெரியாமல் குழந்தை தனது தாயை எழுப்பும் விடியோ பார்ப்போரை கலங்கச் செய்தது. 

இதையடுத்து, பிகார் ரயில் நிலையத்தில் பசி காரணமாக பால் கிடைக்காததால் 4 வயது குழந்தை உயிரிழந்துள்ள மற்றொரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

தில்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக பிகாருக்கு தனது மனைவி மற்றும் 4 வயது மகனுடன் புறப்பட்டுள்ளார் மசூத் ஆலம். வெயில் மற்றும் பசி காரணமாக குழந்தை நெடு நேரம் அழுதுள்ளது. ரயில் முசாபர்பூர் நிறுத்தத்தில் நின்றபோது மசூத், குழந்தைக்கு கொடுக்க பால் வாங்க அலைந்துள்ளார். ஆனால்,  ரயில் நிலையத்தில் கிடைக்கவில்லை. அங்குள்ள அதிகாரிகளிடமும் இதுகுறித்து தெரிவித்தும் பலனில்லை. இறுதியில் குழந்தை ரயிலிலேயே உயிரிழந்தது. இந்த சம்பவம் மற்றும் குழந்தையின் தந்தை புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 

ஆனால், முசாபர்பூர் ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்னரே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குழந்தை இறந்துவிட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.