”மத உணர்வுகளைப் புண்படுத்தி விட்டார்”: அமிதாப் பச்சன் மீது பாஜக எம்.எல்.ஏ. புகார்
தனியார் தொலைக்காட்டி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் மூலம் இந்து மத உணர்வுகளை அமிதாப் பச்சன் புண்படுத்தி விட்டதாக மகாராஷ்டிர பாஜக சட்டமன்ற உறுப்பினர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் மூலம் இந்து மத உணர்வுகளை அமிதாப் பச்சன் புண்படுத்தி விட்டதாக மகாராஷ்டிர பாஜக சட்டமன்ற உறுப்பினர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பங்கேற்று வரும் அமிதாப் பச்சன் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மனு ஸ்மிருதி தொடர்பாக அவர் போட்டியாளரிடம் எழுப்பிய கேள்வியின் மூலம் அவர் சர்ச்சையில் சிக்கினார்.
அந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், “ "டிசம்பர் 25, 1927 அன்று, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரும் அவரது ஆதரவாளர்களும் எந்த நூலின் நகல்களை எரித்தனர்?" எனப் போட்டியாளரிடம் கேட்டார். அதற்கு பதிலளிக்க விஷ்ணு புராணம், பகவத் கீதை, ரிக்வேத் மற்றும் மனுஸ்மிருதி ஆகிய விருப்பங்கள் அளிக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மகாராஷ்டிர பாஜக சட்டமன்ற உறுப்பினர் அபிமன்யு பவார், “இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் முயற்சியும், இந்துக்களிடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கும் முயற்சியும் நடந்துள்ளது." என்று கூறி தனது சுட்டுரைப் பக்கத்தில் லாத்தூர் காவல் நிலையத்தில் அமிதாப் பச்சன் மீது அளிக்கப்பட்ட புகாரின் முதல்தகவல் அறிக்கையின் நகலை பதிவிட்டுள்ளார்.
மேலும், “அவர்களின் நோக்கங்கள் சரியானதாக இருந்திருந்தால், அவர்கள் இந்து கையெழுத்துப் பிரதிகள் மட்டுமல்லாமல் பல்வேறு மத கையெழுத்துப் பிரதிகளின் பெயர்களையும் குறிப்பிட்டிருப்பார்கள்.” என பவார் தெரிவித்துள்ளார்.