பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு அஞ்சப்போவதில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மோடி வாக்குப்பதிவு இயந்திரம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்
பிகார் சட்டப்பேரவை 3-வது கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று (செவ்வாய்க் கிழமை) தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
நேற்று கதிஹார் என்ற இடத்தில் உரையாற்றிய அவர் இன்று மாதேபுரா, அரிரா பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மோடி வாக்குப்பதிவு இயந்திரம் என்று விமர்சித்தார். மோடி வாக்குப்பதிவு இயந்திரம் அல்லது அவரது ஊடகங்களுக்கு அஞ்சப்போவதில்லை. உண்மை என்றுமே உண்மைதான். நீதி என்றுமே நீதிதான் என்று கூறினார்.
மேலும், நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சித்தாந்தப் போரை நடத்துகிறேன். பாஜகவினரின் எண்ணங்களுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி மக்களுடனான சந்திப்புகளில் என்னைப் பற்றி விரும்பத்தகாத விஷயங்களை கூறுகிறார். அவர்கள் வெறுப்பை மட்டுமே பரப்ப முயற்சிக்கிறார்கள். நான் எப்போதும் அன்பை பரப்ப முயற்சிக்கிறேன். வெறுப்பால் வெறுப்பை தோற்கடிக்க முடியாது, அன்பால் மட்டுமே முடியும் என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.