ரூ. 3 கோடி கஞ்சா சிக்கியது: பாலக்காட்டில் ஆந்திர வியாபாரி கைது
ஆந்திரத்தில் இருந்து கேரளத்திற்கு தமிழகம் வழியாக 3 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை கடத்த முயன்ற ஆந்திர மாநிலத்தின் பிரபல கஞ்சா வியாபாரி உள்பட இருவரை கேரள காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆந்திரத்தில் இருந்து கேரளத்திற்கு தமிழகம் வழியாக 3 கோடி ரூபாய் மதிப்பிலான 292 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற ஆந்திர மாநிலத்தின் பிரபல கஞ்சா வியாபாரி உள்பட இருவரை கேரள காவல்துறையினர் பாலக்காடு அருகே கைது செய்தனர்.
ஆந்திரத்தில் இருந்து கேரளத்திற்கு தமிழகம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக கேரள மாநிலம் பாலக்காடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த மினி லாரி ஒன்றை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் வாகனத்தை ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றதை அடுத்து காவல்துறையினர் அதனை துரத்திச்சென்று மஞ்சாகுளம் தேவாலயம் அருகே மடக்கிப்பிடித்தனர்.
தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்த போது தண்ணீர் கேன்களுக்கு கீழே மூட்டை மூட்டையாக கஞ்சா பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் இருந்த இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆந்திரத்தின் நெல்லூர் மாவட்டம் பத்துவரிபாளம் கிராமத்தைச் சேர்ந்த போரெஸ்ஸி வெங்கடேஸ்வரலு ரெட்டி (35), மற்றும் தமிழ்நாடு, சேலம் பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த சேர்ந்த ஓட்டுனர் வினோத் குமார் (27) ஆகியயோர் என்பதும் ஆந்தித்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 292 கிலோ கஞ்சா மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் சந்தை மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள வெங்கடேஸ்வரலு ஆந்திரத்தில் பிரபல கஞ்சா வியாபாரியாக வலம் வந்ததும் அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.