முகப்பு
இந்தியா

இந்தியாவில் மேலும் 45 ஆயிரம் பேருக்கு கரோனா

இந்தியாவில் புதிதாக 45,903 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:


புதுதில்லி: இந்தியாவில் புதிதாக 45,903 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 23 மணி நேரத்தில் புதிதாக 45,903 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 85,53,657-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 490 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,26,611-ஆக உயர்ந்துள்ளது. 

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 125 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில் 77 பேர், மேற்கு வங்கத்தில் 59 பேர், உத்தர பிரதேசத்தில் 26 பேர், கேரளத்தில் 24 பேர், கர்நாடகத்தில் 22 பேர், தமிழ்நாட்டில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 79,17,379-ஆக அதிகரித்துள்ளது. குணமடைபவர்கள் விகிதம் 92.56 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.48 சதவீதமாகவும் உள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 11-ஆவது நாளாக 6 லட்சத்துக்கு கீழ் இருந்தது. அதன்படி, மொத்தம் 5,09,673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பு விகிதத்தில் 5.96 சதவீதமாகும்.

"நாடு முழுவதும் நவ. 8-ஆம் தேதி வரை மொத்தம் 11,85,72,192 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8,35,401 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன' என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.