உ.பி., மேற்கு வங்க தேர்தல்களிலும் போட்டியிடுவோம்: ஒவைசி
பிகார் பேரவைத் தேர்தல் முடிவுகள் அளித்த ஊக்கத்தையடுத்து, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் தேர்தல்களிலும் போட்டியிட திட்டமிட்டு வருவதாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
பிகார் பேரவைத் தேர்தல் முடிவுகள் அளித்த ஊக்கத்தையடுத்து, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் தேர்தல்களிலும் போட்டியிட திட்டமிட்டு வருவதாக அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளர்களைச் சந்தித்த ஒவைசியிடம், பிகார் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை ஏ.ஐ.எம்.ஐ.எம். பிரித்ததாக எழும் விமரிசனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளிக்கையில், "நான் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கூறுகிறீர்களா. மகாராஷ்டிரத்தில் சிவசேனை மடியில் அமர்ந்தது காங்கிரஸ்.
நான் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் நாட்டின் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவேன். தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் யார் அனுமதியைப் பெற வேண்டும்.
ஏ.ஐ.எம்.ஐ.எம். 2022 உத்தரப் பிரதேச தேர்தலிலும் போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.
அதீர் ரஞ்சன் சௌதரியின் சொந்த தொகுதியில் முஸ்லிம்களின் நிலைமை ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு அவர் பதிலளிக்க வேண்டும். முஸ்லிம்களுக்காக அவர் என்ன செய்தார் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
ஏ.ஐ.எம்.ஐ.எம். மேற்கு வங்க தேர்தலிலும் போட்டியிடும். ஏ.ஐ.எம்.ஐ.எம். மேற்கு வங்கத்துக்கு வருகிறது."
பிகார் பேரவைத் தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. மகா கூட்டணியின் வெற்றியை ஏ.ஐ.எம்.ஐ.எம். பெற்ற வாக்குகள் தகர்த்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
முன்னதாக, பிகார் தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வாக்குகளைப் பிரித்ததாக காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.