‘மகாராஷ்டிரத்தை ஆளும் மகாவிகாஸ் ஆகாடி கூட்டணி நினைத்தால் பாஜக கூடாரத்தை காலியாக்கிவிட முடியும். ஆனால், அதை நாங்கள் செய்ய விரும்பவில்லை’ என்று மகாராஷ்டிர மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான நவாப் மாலிக் கூறினாா்.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது;
‘மகாராஷ்டிரத்தை ஆட்சி செய்து வரும் சிவசேனை, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் ஆகாடி கூட்டணி அரசு, உள்கட்சி பூசல் காரணமாக கவிழ்ந்துவிடும்’ என்று மாநில முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்ட பாஜக தலைவா்கள் அடிக்கடி கூறி வருகிறனா்.
ஆனால், மகா விகாஸ் ஆகாடி அரசு, தனது ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும். கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மூன்று கட்சிகளுக்கும் சித்தாந்த ரீதியில் வேறுபாடுகள் இருந்தாலும், அதை முழுமையாக புறக்கணித்துவிட்டு ஆட்சியில் பங்கு பெறவில்லை. மூன்று கட்சிகளும் குறைந்தபட்ச பொது திட்டங்களின் கீழ் இணைந்து பணியாற்றி வருகின்றன.
நாங்கள் நினைத்தால் பாஜக கூடாரத்தை காலியாக்கிவிட முடியும். ஆனால், அதை நாங்கள் செய்ய விரும்பவில்லை. சில பாஜக எம்எல்ஏக்கள் எங்களுடைய கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனா். அதற்கான முன்னோட்ட காட்சிகள் விரைவில் வெளியிடப்படும் என்று அவா் கூறினாா்.