பிரதாப்கர்: மத்தியப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்ட காவல்நிலையமானது வித்தியாசமான ஒரு காரணத்தால் புகழ்பெற்று வருகிறது.
மத்தியப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்ட காவல்நிலையத்தில் சுஷில் என்பவர் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் தென்படும் பாம்புகளைப் பிடிப்பதில் புகழ்பெற்று விளங்குவதன் காரணமாக அந்தக் காவல் நிலையமானது சுற்றுவட்டாரங்களில் புகழ்பெற்று வருகிறது.
திங்களன்று கூட அருகில் உள்ள பனியரி கிராமத்தில் வயல்வெளியில் தென்பட்ட சிறிய ரக மலைப்பாம்பு ஒன்றினை பொதுமக்கள் வேண்டுகோளின்படி சுஷில் சென்று பிடித்துள்ளார். அதனை சாக்குப்பை ஒன்றில் போட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார். அங்கு சாக்குப்பையினைக் கிழித்துக் கொண்டு அந்த மலைப்பாம்பானது வெளியேற முயல, காவல்நிலையத்தில் உள்ளோர் பரபரப்படைந்துள்ளனர். பின்னர் சுஷிலே அதனை மீண்டும் பத்திரமாகப் பிடித்து, அருகில் உள்ள கஜஹரா காட்டுப் பகுதியில் விட்டுள்ளார்.
இதுகுறித்து சுஷில் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ‘இப்போதெல்லாம் வனத்துறைக்குத் தகவல் தெரிவிப்பதற்கு முன்பாக எனக்குதான் மக்கள் முதலில் தகவல் தெரிவிக்கின்றனர். இதுபோன்று பாம்புகளைப் பற்றி எங்கிருந்து தகவல் வந்தாலும் நான் அங்கு சென்று
அவற்றைப் பிடித்து விடுகிறேன். எனக்கு பாம்புகள் குறித்து ஒருபோதும் அச்சம் இல்லை. அத்துடன் எனக்கும் ஆபத்து இல்லாமல், பாம்புகளுக்கும் எதுவும் நேராமல் அவற்றை எப்படிப் பிடிப்பது என்பது எனக்குத் தெரியும்’ என்று தெரிவித்துள்ளார்.