கரோனா பரவல் காரணமாக மீண்டும் பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. தில்லியில் கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தில்லியில் மீண்டும் பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை என மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புதன்கிழமை தெரிவித்தார்.
மேலும், “கரோனா பாதிப்பிற்கு எதிரான போராட்டத்தில் பொதுமுடக்கம் மட்டுமே தீர்வு அல்ல என்று நாங்கள் நம்புகிறோம். சிறந்த மருத்துவமனை மேலாண்மை மற்றும் சிறந்த மருத்துவ வசதிகளே தீர்வுகளாக இருக்க முடியும். அந்த வகையில் தில்லி அரசு மருத்துவ வசதிகளை சிறப்பாக வழங்கி வருகிறது” எனத் தெரிவித்தார்.
தில்லியில் இதுவரை 4 லட்சத்து 95 ஆயிரத்து 598 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.