தில்லியில் கரோனா படுக்கை வசதி அதிகரிக்கப்படும்: கேஜரிவால் உறுதி
தில்லி மருத்துவமனையில் கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உறுதியளித்துள்ளார்.
தில்லி மருத்துவமனையில் கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உறுதியளித்துள்ளார்.
தில்லியில் கரோனா வைரஸ் தொற்று மூன்றாவது முறையாக மீண்டும் அதிக அளவில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் முதல்வர் கேஜரிவால் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை மேற்கொண்டார்.
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கேஜரிவால் நேரில் பார்வையிட்டார்.
தில்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால், மருத்துவமனைகளில் வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்து வருவதாகக் கூறினார்.
மேலும், தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் கூடுதலாக 50 முதல் 100 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.