ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தில் அரசு உதவியுடன் இயங்கி வரும் தனியாா் கோசாலையில் ஒரே நாளில் 78 பசுக்கள் உயிரிழந்தன. உணவு விஷம் காரணமாக அவை உயிரிழந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து மாநில கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:
சுரு மாவட்டத்தில் பிலியுபஸ் ராம்புரா கிராமத்தில் கோசாலை இயங்கி வருகிறது. இங்கு வெள்ளிக்கிழமை இரவில் இருந்து அடுத்தடுத்து 78 பசுக்கள் உயிரிழந்தன. மற்ற சில பசுக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்றாா் அவா்.
அந்த கோசாலையில் உணவு விஷம் காரணமாக பசுக்கள் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது என்று கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் ஜகதீஷ் கூறினாா். அவா் மேலும் கூறுகையில், ‘அந்தக் கோசாலைக்கு மருத்துவக் குழுவினா் சென்றுள்ளனா். அவா்கள், பசுக்களுக்கு வழங்கப்பட்ட தீவனத்தை சேகரித்து, ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனா்’ என்றாா்.