தில்லி நோக்கி வரும் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லி செல்வோம் என்ற பெயரில் ஹரியாணா வழியாக தில்லி நோக்கி பேரணியாக வரும் விவசாயிகள்
புது தில்லி: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லி செல்வோம் என்ற பெயரில் ஹரியாணா வழியாக தில்லி நோக்கி பேரணியாக வரும் விவசாயிகள் மீது சிங்கு எல்லைப் பகுதியில் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிக் கலைத்தனர்.
தில்லியை ஹரியாணாவுடன் இணைக்கும் எல்லைப் பகுதியில், விவசாயிகள் மீது தில்லி காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளைக் கலைக்க நாங்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தினோம் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தில்லியின் எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கரோனா பொதுமுடக்கம் காரணமாக, தில்லியில் பாராட்டம் நடத்தவோ, பேரணி செல்லவோ தடை விதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகளிடம் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், விவசாயிகள் தில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி அவர்கள் உள்ளே நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள கூறியுள்ளனர்.
மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகா் தில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளதால், தில்லி மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தில்லியின் எல்லைப் பகுதிகளில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை அண்மையில் கொண்டுவந்து சட்டமாக்கியது.
இந்த சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகளும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். இவா்கள், வியாழக்கிழமை தில்லி நோக்கி பேரணியாகப் புறப்பட்டனா்.
ஹரியாணா மாநிலம் வழியாக தில்லியை அடைந்து தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளனா். இந்நிலையில், இவா்களை ஹரியாணா எல்லையான அம்பாலா பகுதியில் அம்மாநில காவல்துறையினர் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், விவசாயிகளின் பேரணியையொட்டி தில்லி எல்லையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் இருந்து தில்லிக்கு வரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்த பிறகே தில்லியினுள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால், தில்லி- உத்தரப்பிரதேசம், தில்லி-ஹரியாணா எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.