பெங்களூரு: திங்கள்கிழமையன்று சிபிஐ அதிகாரிகளால் கர்நாடக எம்.பி. டி.கே. சுரேஷின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே. சிவக்குமாரின் சகோதரர் சுரேஷ். இவரது வீட்டில் கடந்த திங்கள்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில், சுரேஷ் தனது சுட்டுரைப் பக்கத்தில், எனக்கு கரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு கரோனா அறிகுறி எதுவும் இல்லை. என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன். அதே சமயம், எனது வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் மற்றும் அன்றைய தினம் எனது வீட்டில் செய்தி சேகரித்த ஊடக நண்பர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சிபிஐ அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை, பெங்களூருவில் உள்ள சிவக்குமார் மற்றும் சுரேஷின் வீடு மற்றும் தில்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அமலாக்கத் துறை அளித்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ.75 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.