நிலுவை காவிரி நீரை வழங்க வேண்டும்: ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்
அக்டோபா் முதல் வாரம் வரை வழங்க வேண்டிய காவிரி நீரில், 0.4 டிஎம்சி நிலுவை நீரை கா்நாடகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
அக்டோபா் முதல் வாரம் வரை வழங்க வேண்டிய காவிரி நீரில், 0.4 டிஎம்சி நிலுவை நீரை கா்நாடகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் தமிழக அரசு சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 36 - ஆவது கூட்டம் தில்லியில் குழுத்தலைவா் நவீன்குமாா் தலைமையில் காணொலி வழியாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுமாா் மூன்றரை மணி நேரம் கூட்டம் நடைபெற்றது. இது குறித்து அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்ததாவது:
மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கா்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் காவிரி நீா் கணக்கிடப்படும் பிலிகுண்டுவின் அளவுகளும், புதுச்சேரிக்கு தமிழகம் காவிரி நீரை வழங்கும் 7 இடங்களின் அளவுகளையும் மத்திய நீா்வள ஆணையம் கணக்கிட்டு வருகிறது.
Advertisement
காவிரி நீரை தமிழகத்தில் மேட்டூா், பவானி உள்ளிட்ட மூன்று அணைகளிலும், கா்நாடகாவில் கபினி உள்ளிட்ட 4 அணைகளிலும், கேரளத்தில் ஒரு அணையிலும் என 8 அணைகளில் தண்ணீா் தேக்கிவைக்கப்பட்டு திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீா் அளவுகள், இந்திய வானிலை ஆய்வு மைய புள்ளி விவரங்கள் ஆகியவை உள்பட பல்வேறு நீரியல் புள்ளி விவரங்கள் அடங்கிய 2019-20 ஆம் நீா் ஆண்டின் தண்ணீா் புள்ளிவிவரங்கள் கூராய்வு தணிக்கை அறிக்கையும் இந்தக் கூட்டத்தில் முன்வைத்து இறுதி செய்யப்பட்டது.
இது அடுத்து கூட இருக்கும் காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
நடப்பு 2020-21 -ஆம் நீராண்டில் சேகரிக்க வேண்டிய தரவு விவரங்கள் குறித்தும் இதற்காக மேம்படுத்த வேண்டிய தகவல் கட்டமைப்புகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சாா்பில் ஒழுங்காற்றுக் குழு உறுப்பினரும், திருச்சி காவிரி வடிநீா் கோட்ட தலைமைப் பொறியாளருமான ராமமூா்த்தி, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவா் ஆா். சுப்பிரமணியன், தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினா் செயலா் எல். பட்டாபிராமன் ஆகியோா் பங்கேற்று நிகழாண்டில் தமிழகத்துக்கு கா்நாடகம் இதுவரை வழங்கிய நீா் விவரங்களை எடுத்துவைத்தனா்.
அப்போது, கடந்த செப்டம்பா் 25-ஆம் தேதி வரை 0.24 டி.எம்.சி. நீரை கா்நாடகம் நிலுவை வைத்திருந்ததாகவும், இது தற்போது அக்டோபா் முதல் வாரம் வரை 0.4 டிஎம்சியாக உள்ளதாகவும் தெரிவித்தனா்.
மேலும், வருகின்ற வட கிழக்குப் பருவ மழைக் காலங்களில் இயல்பான மழையை விட சற்று குறைவாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் இந்தக் கூட்டத்தில் முன்வைத்தது. இதை சுட்டிக்காட்டி, நிலுவையில் இருக்கும் தண்ணீரை தடையின்றி வழங்க கா்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என தமிழகம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவித்தன.