ராஜஸ்தான்: நிலத்தகராறில் கோயில் பூசாரி எரித்துக் கொலை
ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில், நிலத்தகராறில் கோயில் பூசாரி ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில், நிலத்தகராறில் கோயில் பூசாரி ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்த மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றில், ராதாகிருஷ்ணன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான 5.2 ஏக்கர் நிலத்தை கோயில் பூசாரி வைத்திருந்தார். வழக்கமாக ராஜஸ்தானில் கோயிலை நிர்வகிக்கும் பூசாரியின் வருவாயை உறுதி செய்ய இதுபோன்ற நிலங்கள் அவர்களுக்கு வழங்கப்படும். கோயிலை நிர்வகிக்கும் வரை அந்த நிலம் அவர்களிடம் இருக்கும்.
இதுபோன்ற ஒரு நிலத்தைத்தான் பூசாரி பாபு லால் வைஷவ் வைத்திருந்தார். இந்த நிலப்பகுதிக்கு அருகே தனக்கென ஒரு வீடு கட்டிக் கொள்ள பூசாரி திட்டமிட்டார். அப்போது அதே கிராமத்தில் வேறு இனத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று, அந்த நிலம் தங்களுடையது என்று கூறி பிரச்னை செய்துள்ளனர். இந்த விவகாரம் பஞ்சாயத்துக்கு வந்த போது, பூசாரிக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த நிலப்பகுதியில் தினையை விதைத்து அறுவடைக்குத் தயார் செய்தார் பூசாரி. ஆனால், அந்த கும்பல் அதேப் பகுதியில் குடிசைப் போட ஏற்பாடு செய்தனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் உச்சக்கட்டமாக பூசாரி எரித்துக் கொலை செய்யப்பட்டார். இறப்பதற்கு முன்பு பூசாரி காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், சுமார் ஆறு பேர் கொண்ட கும்பல், தனது நிலத்தில் விளைவித்திருந்த தினை மீது பெட்ரோல் ஊற்றி பயிரை எரித்தனர். பிறகு, என் மீதும் பெட்ரோல் ஊற்றி எரித்தனர் என்று கூறியிருந்தார். இந்த படுபாதக செயலில் ஈடுபட்டவர்களின் பெயர்களையும் அவர் கூறியிருந்தார்.
சம்பவத்தில் தீக்காயங்களுடன் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூசாரி, வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார்.