இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பிற்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த தில்லி அரசு
மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பிற்கு தில்லி அரசு ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பிற்கு தில்லி அரசு ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
புதுதில்லியில் காற்று மாசுபாட்டு அளவு கடந்த சில வருடங்களாக உச்சத்தை எட்டி வருகிறது. அதனையொட்டி மாசு அளவைக் குறைக்க தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையம் வகுத்துள்ள காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகள் (கிராப்) தில்லியில் அக்டோபா் 15 முதல் அமலுக்கு வருகிறது.
டீசல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, கட்டுமானத் திட்டங்களில் தூசி மேலாண்மையை உறுதி செய்வது, தொழிற்சாலைகளில் எரிவாயு பயன்பாட்டை கண்காணிப்பது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தில்லி வளாகத்தில் கட்டுமான இடிப்புப் பணிகளில் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாததால் அந்நிறுவனத்திற்கு ரூ.20 லட்சம் அபராதத்தை விதித்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 15 நாட்களுக்குள் அபராதத் தொகையைக் கட்டவும் புகைப்போக்கிகளை நிறுவாமல் எந்தவொரு இடிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவோ அல்லது மறுதொடக்கம் செய்யவோ கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வழிகாட்டுதல்களின்படி, 20,000 சதுர மீட்டருக்கும் அதிகமான கட்டுமான இடிப்புப் பணிகளில் புகைப்போக்கிகளை நிறுவுவது கட்டாயமாகும்.